கங்கனா பிரசாரத்திற்கு இடையூறு! காங்., பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆணையம்!!
ஹிமாசலப் பிரதேசத்தில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத்தின் பிரசாரத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி பிரமுகர்களுக்கு தேர்தல் அதிகரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு ஜுன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி தீவிர பிரசாரத்தில் கங்கனா ரணாவத் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தின் லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கங்கனா ரணாவத்தின் பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட சிலர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை (மே 20) நடைபெற்ற பிரசாரத்தின்போது ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலுள்ள கஸா பகுதியில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கங்கனா ரணாவத்தின் பேரணி நடைபெறும் (முன்பே ஒப்புதல் பெறப்பட்ட) பகுதிக்கு அருகிலேயே காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக மாநில இளைஞர் காங்கிரஸ் அலுவலக பணியாளருக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து 1,406 புகார்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட அதிகாரிகளிடம் 778 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 691-க்கு தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார். இதேபோன்று மண்டல அலுவலர்களிடம் 349 புகார்கள் பதிவானதாகவும், இதில் 266 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.