![எய்ம்ஸ் ரிஷிகேஷ்](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F59200428-f7ef-4dfe-9201-8b7451383d2d%2Faiims_suv11.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், பயிற்சி பெண் மருத்துவருக்கு, செவிலியர் பிரிவு அதிகாரி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறையின் எஸ்யுவி வாகனம் நேராக மருத்துவமனையின் ஆறாவது தளத்துக்குச் சென்று, குற்றவாளி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல் தளத்தில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவைக் கடந்து சென்ற காவல்துறை வாகனத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பலாத்கார துன்புறுத்தல் நிகழ்ந்துள்ளது, அறுவைசிகிச்சை அறைக்குள் அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்தபோது, பணியிலிருந்த இளநிலை உறைவிட மருத்துவருக்கு, செவிலியர் அதிகாரி சதீஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அடுத்த நாள் வாட்ஸ்ஆப் மூலம் மோசமான செய்திகளையும் அவர் அனுப்பியிருக்கிறார். மேலும், இதனை வெளியே சொன்னால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார்.
இது குறித்து காவல்துறைக்கு செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சதீஷ் குமார் மீது 354 மற்றும் 506 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதன்கிழமை, காவல்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், குற்றவாளியை உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற வேண்டும், அவரை வெளியேற்றும்போது, இங்கிருக்கும் கும்பலால் அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறினர்.
எனவேதான், ஆம்புலன்ஸ் செல்லும் அவசரப் பாதையைப் பயன்படுத்தி, காவல்துறையினர் வாகனத்தை 6வது தளத்துக்குக் கொண்டு சென்றனர்.
குற்றவாளியை நடக்க வைத்துக் கூட்டி வருவது ஆபத்தாகும் என்பதால்தான் காவல்துறை வாகனம் மேலே செல்ல வேண்டியிருந்தது. காவல்துறை வாகனத்தைப் பார்த்ததம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வாகனத்தை சூழ்ந்துகொண்டனர். எனவேதான், அவசர சிகிச்சைப் பிரிவு வழியாக வாகனத்தை வெளியே அனுப்ப பாதுகாப்பு வீரர்கள் உதவி செய்தனர் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
குற்றவாளி, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தால் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.