![பாயல் கபாடியா](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F35d187ab-0c18-4a6f-894f-63ee49fa860b%2FAP05_26_2024_000233B.jpg?rect=1%2C0%2C3870%2C2177&w=480&auto=format%2Ccompress&fit=max)
கேன்ஸ் திரைப்பட விழாவில் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்திற்காக கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix) விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற இயக்குநர் பாயல் கபாடியாவை நினைத்து நாடு பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"ஆல் வி இமேஜின் அஸ் லைட்' என்ற படைப்புக்காக 77 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற பாயல் கபாடியாவை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. எஃப்.டி.ஐ.ஐ.யின் முன்னாள் மாணவியின் குறிப்பிடத்தக்க திறமை உலக அரங்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறது. இது இந்தியாவில் உள்ள செழுமையான படைப்பாற்றலின் பார்வையை அளிக்கிறது. இந்த மதிப்புமிக்க பாராட்டு அவரது தனித்தன்மையான திறமைகளை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இந்திய திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாயல் கபாடியா இயக்குநராக அறிமுகமான,"ஆல் வி இமேஜின் அஸ் லைட்" சனிக்கிழமை நடைபெற்ற 77 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பால்ம்டி’ஓருக்குப் பிறகு இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.
ஒரு இந்திய பெண் இயக்குநரின் திரைப்படம் முக்கிய போட்டிப் பிரிவில் காட்சிப்படுத்தப்படுத்தப்படுவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஷாஜி என்.கருணின் "ஸ்வஹம்" என்ற திரைப்படம் தான் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி இந்தியத் திரைப்படமாகும்.
இந்திய-பிரெஞ்சு இணைத் தயாரிப்பில் மலையாளம்,ஹிந்தி மொழிப் படமான, "ஆல் வி இமேஜின் அஸ் லைட்டில்'' கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் ஆகியோர் நடித்துள்ளனர்.