தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

ஜூன் 2-ல் சரண்! அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு!

ஜூன் 2-ல் சரண் அடைவேன் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால்- -
Updated On :31 மே 2024, 3:20 pm

DIN

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் உள்ள காவல்துறை முன்னிலையில் தான் சரணடையப்போவதாக அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால், தனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மிக மோசமான நோய்க்கான அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சிறையில் எத்தனை காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. சர்வாதிகாரிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற தான் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கேஜரிவால் கூறினார்.

என்னை அழிக்க, என்னை மௌனமாக்க அவர்கள் பல வழிகளைக் கையாள்கிறார்கள் ஆனால், அதில் அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை, நான் சிறையில் இருந்த போது, என்னை பல வழிகளில் துன்புறுத்தினார்கள். எனக்கு மருந்து கொடுக்காமல் தடுத்தனர், இவர்களுக்கு என்னதான் வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இதை அவர்கள் செய்கிறார்கள் என்றும்? என்று பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார்.

நான் சிறைக்குச் சென்றபோது எனது உடல் எடை 70 கிலோ. ஆனால் இப்போது 64 கிலோ. நான் பிணையில் விடுதலையான பிறகும் கூட எனது உடல்எடை கூடவில்லை. உடல்நிலையைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ பெரியநோய் இருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

எனக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 21 நாள் பிணை நாளை மறுநாளுடன் முடிகிறது. நான் மீண்டும் திகார் சிறைக்குத் திரும்புகிறேன், மாலை 3 மணியளவில் என்னுடைய வீட்டிலிருந்து புறப்படுவேன், இன்னும் இந்த முறை என்னை கூடுதலாக துன்புறுத்துவார்கள், ஆனால், அவர்களுக்கு நான் அடிபணிய மாட்டேன் என்றும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மருத்துவப் பரிசோதனைக்காக 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தின் பதிவுத் துறை புதன்கிழமை மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.