
தில்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசுபாட்டால் 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “காற்று மாசுபாட்டைக் குறைக்க, தில்லி அரசு, வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வீட்டில் இருந்தே வேலை செய்வார்கள். இந்த விதிமுறையை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அரசு அலுவலகங்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரையும், மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் செயல்பட நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதிகரிக்கும் காற்றுமாசுபாடு மக்களுக்கு அதிகளவிலான சுவாசக்கோளாறு போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினமான திங்கள்கிழமை 494 என்ற அளவில் இருந்த காற்று தரக்குறியீடு செவ்வாய்க்கிழமை 460 ஆக குறைந்திருந்தாலும், தற்போது காற்றின் தரம் மோசமான நிலையிலேயே இருக்கிறது.
காற்றின் தர குறியீடு 401 - 450 வரையிலான அளவுகள் கடுமையான மற்றும் 451 - 500 மிகக்கடுமையானது என்றும் 500-க்கு மேல் மிக மிகக் கடுமையாக மாசடைந்துள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி தில்லியில் கடந்த ஒரு வாரத்தில் காற்றின் தரம் கடுமையான வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 441, திங்கள்கிழமை 417, நவம்பர் 15 ஆம் தேதி 396 ஆக காற்றின் தர குறியீடு மோசமடைந்து வருகிறது.
இதுபற்றி வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், இன்னும் ஓரிரு நாள்களில் மாசுபாடு குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.