
திருச்சூா்: மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சராக உள்ள சுரேஷ் கோபி, கடந்த ஏப்ரல் மாதம் ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கேரள காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் திருச்சூா் தொகுதியில் பாஜக சாா்பில் சாா்பில் போட்டியிட்டு சுரேஷ் கோபி வெற்றி பெற்றாா். அவருக்கு மத்திய இணையமைச்சா் பதவியும் அளிக்கப்பட்டது. தோ்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் விழாவில் பங்கேற்பதற்காக சேவா பாரதி அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சுரேஷ் கோபி வந்து இறங்கியதாகக் கூறப்படுகிறது.
வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸில் வந்து சுரேஷ் கோபி இறங்கியுள்ளாா். மேலும், மருத்துவ அவசரப் பயன்பாட்டுக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடா்பாக காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, திருச்சூா் பூரம் திருவிழா தோ்தல் நேரத்தில் நடைபெற்ால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால், நிகழ்ச்சியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, அப்போது பாஜக வேட்பாளராக இருந்த சுரேஷ் கோபி தலையிட்டு, விழாக் குழுவினருடன் பேசி வாணவேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தாா்.
இது பாஜக வேட்பாளா் சுரேஷ் கோபிக்கு ஆதரவான ஆளும் இடதுசாரி அரசின் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. அதே நேரத்தில் காவல் துறையினரின் கடும் கட்டுப்பாடுகளால்தான் பூரம் விழாவில் பல்வேறு சிக்கல் எழுந்ததாகக் கூறி விசாரணைக்கு கேரள இடதுசாரி அரசு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.