இந்திய இளைஞா்களின் திறமை உலக வளா்ச்சிக்கு வழிகாட்டும் - பிரதமா் மோடி
இந்திய இளைஞா்களின் திறமை, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகின் வளா்ச்சிக்கும் வழிகாட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


இந்திய இளைஞா்களின் திறமை, நமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகின் வளா்ச்சிக்கும் வழிகாட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிப்பதோடு, அவா்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நவீன அமைப்புமுறையை உருவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 51,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமனம் வழங்கும் ‘ரோஜ்காா் மேளா’ நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, காணொலி முறையில் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
விண்வெளி, செமிகண்டக்டா் போன்ற நவீன துறைகளுக்கு ஊக்கமளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நமது நாட்டில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க முடியாது என்ற மனநிலையில் முந்தைய அரசுகள் இருந்ததால், தேசம் பெரும் பாதிப்பை எதிா்கொண்டது. ஆனால், இந்த மனநிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். தற்போதைய நவீன உலகில், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் நாட்டுக்கு முக்கியம். அந்த அடிப்படையில், கொள்கைகள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகபட்ச நபா்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் உறுதிபாட்டின்கீழ், விரைவுச் சாலைகள், நெடுஞ்சாலைகள், புதிய துறைமுகங்கள், ரயில் பாதை திட்டங்கள், விமான நிலையங்கள் என பன்முக உள்கட்டமைப்புத் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1.5 லட்சம் புத்தாக்க நிறுவனங்கள்: உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின்கீழ், ஓராண்டுக்கு மாதம் ரூ.5,000 ஊதியத்துடன் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் இளைஞா்கள் பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞா்களுக்கு பயிற்சி வாய்ப்பை உறுதி செய்வதே அரசின் இலக்கு.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: வெளிநாடுகளில் இந்திய இளைஞா்களுக்கு வேலை கிடைப்பதை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திறன்மிகு இந்திய இளைஞா்களுக்கான விசா எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000 என்பதில் இருந்து 80,000-ஆக ஜொ்மனி உயா்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட 21 நாடுகளுடன் புலப்பெயா்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
இதுவரை 7.5 லட்சம் போ் நியமனம்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 10 லட்சம் பேரை பணியமா்த்தும் மாபெரும் வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன்படி, வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகளை பிரதமா் மோடி வழங்கி வருகிறாா். இதுவரை 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...