
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த இரண்டு நாள்களாக சுகாதாரத் துறை அலுவலகம் எதிரே சாலையில் போராடி வரும் மருத்துவர்களுக்கு பல தரப்பிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.
எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி, மருத்துவர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத் துறை அலுவலக வாயிலில், 2 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் மருத்துவர்கள் உள்பட இளநிலை மருத்துவர்களின் இந்த போராட்டத்துக்கு மக்களும் தங்களது ஆதரவை அளிக்கும் வகையில், இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பல பெண்கள் ஒன்றாக இணைந்து, போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். அங்கு தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் போராடி வரும் மருத்துவர்களுக்கு வழங்கினார்கள். சில பெண்கள் வீட்டிலேயே மருத்துவர்களுக்காக சமைத்து உணவுகளைக் கொண்டு வந்திருந்தனர்.
புதன்கிழமை காலை, பல மூத்த மருத்துவர்கள், போராடி வரும் மருத்துவர்களுக்கு உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். தங்களது உரிமைக்காக அவர்கள் போராடி வருகிறார்கள். யார் இரவு முழுக்க சாலையில் இருப்பார்கள்? அவர்களும் எங்களது பிள்ளைகள்தான், மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் இங்கு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் நாம்தான் செய்துகொடுக்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உதவு செய்ய மூத்த மருத்துவர்கள் வருவதில் பெரிய விஷயமில்லை என்று நிரூபிக்கும் வகையில், மக்கள் பலரும், பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். ஒரே பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, மருத்துவர்களுக்கு உணவு தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்துள்ளனர். இவர்களும் எங்களது பிள்ளைகள்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறிச்சென்றள்ளனர்.
அதுபோல, ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து, மருத்துவர்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
போராட்டக்களம்.. உணர்ச்சிப்போராட்டம்
சிலர், தங்களால் முடிந்த உதவிகளை அதாவது, தேநீர் வழங்குவது, சாக்லெட் வாங்கிவந்து கொடுப்பது போன்றவற்றைக்கூட செய்து வருகிறார்கள். இதனால், போராட்டக் களதுக்கு இடையே, உணர்வுப்போராட்டமும் நடக்கிறது. இத்தனை நேரம் ஒருவரால் சாலையில் அமர்ந்திருக்க முடியுமா? அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் என்று மக்களும் அவர்களது குரலாக ஒலிக்கிறார்கள்.
தொழில் நிறுவனங்கள், ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊதியர்கள் என பல்வேறு குழுக்கள் மின் விசிறிகளை வழங்குவது போன்றவற்றையும் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நல்லுள்ளங்களால், ஒருபக்கம், போராட்டக் களத்தில் உதவிப் பொருள்கள் குவிந்து வருகின்றன. அவை போராடி வரும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது. உங்களுக்காக மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.