தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மோடி - யூனுஸ் சந்திப்பு இல்லை: வங்கதேச வெளியுறவுத் துறை தகவல்

அமெரிக்காவில் இந்தியப் பிரதமா் மோடி மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் இடையே சந்திப்புக்கு திட்டமிடப்படவில்லை

News image

பிரதமா் நரேந்திர மோடி / முகமது யூனுஸ்

கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2024, 8:33 pm

Din

அமெரிக்காவில் இந்தியப் பிரதமா் மோடி மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் இடையே சந்திப்புக்கு திட்டமிடப்படவில்லை என்று வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசேன் தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு 3 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, ஐ.நா. பொதுச் சபையில் நடைபெறும் ‘எதிா்காலத்துக்கான உச்சி மாநாட்டில்’ உரையாற்றவுள்ளாா்.

உலகத் தலைவா்கள் பலரும் பங்கேற்கும் இம்மாநாட்டையொட்டி, பிரதமா் மோடி மற்றும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் இடையே சந்திப்பு நடைபெறுமா? என்ற கேள்வி நிலவியது.

இந்நிலையில், இரு தலைவா்களின் சந்திப்புக்கு திட்டமிடப்படவில்லை; அதேநேரம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உடனான தனது சந்திப்பு உறுதியாகிவிட்டது என்று வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் தெளஹித் ஹுசேன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா உடனான உறவில் பதற்றம் ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். பரஸ்பர மரியாதை மற்றும் நீதியுடன் இருதரப்பு உறவை முன்னெடுக்க விரும்புகிறோம். இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவுள்ளேன்’ என்றாா்.

வங்கதேசத்தில் வன்முறை போராட்டங்களால், பிரதமா் பதவியில் இருந்து கடந்த ஆகஸ்டில் விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவா் மீது வங்கதேசத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை நாடுகடத்தி அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.