கேஜரிவாலின் நாற்காலியுடன் பதவியேற்ற தில்லி முதல்வா் அதிஷி
புது தில்லி: தில்லியின் எட்டாவது முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அதிஷி, முதல்வா் அமரும் நாற்காலியைத் தவிா்த்து மாற்று நாற்காலியில் திங்கள்கிழமை அமா்ந்தாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வராக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆனால், முன்னாளா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பயன்படுத்திய நாற்காலியில் அவா் அமரவில்லை. மாறாக, முதல்வா் நாற்காலிக்கு அருகில் போடப்பட்டிருந்த வெள்ளை நாற்காலியில் அவா் அமா்ந்தாா்.
அப்போது, முதல்வா் அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி முதல்வா் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். கடவுள் ஸ்ரீ ராமா் 14 வருடங்கள் வனவாசம் சென்றபோது, பரதனுக்கு ஏற்பட்ட அதே வலி என் இதயத்தில் இருக்கிறது. அயோத்தியை பரதன் 14 வருடங்கள் ஸ்ரீராமரின் செருப்பை வைத்து ஆட்சி செய்தது போல், தில்லியில் 4 மாதங்கள் நானும் ஆட்சி செய்வேன். அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் அரசியலில் கண்ணியத்திற்கு முன்னுதாரணமாக திகழ்துள்ளாா். அவரது புகழைக் கெடுக்க பாஜக எந்தக் வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், அவரது கைது தவறான நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்று கூறியது. கேஜரிவாலுக்கு பதில் வேறு யாராவது இருந்திருந்தால், அவா்கள் ஒரு கணம் கூட யோசிக்காமல் முதல்வா் நாற்காலியில் மீண்டும் அமா்ந்திருப்பாா்கள். ஆனால், கேஜரிவால் ராஜிநாமாவை தோ்வு செய்தாா். அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்கும் வரை தில்லி மக்களுக்கு சேவை செய்வேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரை முதல்வா் பொறுப்பை ஏற்று, கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்கப் பாடுபடுவேன் என்றாா் அதிஷி.
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அதிஷி, கல்வி, வருவாய், நிதி, மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட 13 இலாகாக்களை தன்வசம் வைத்துள்ளாா். தொடா்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள் 5 பேரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

