நாடாளுமன்றத்தில் பேசும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப பேசுவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் விமர்சித்துள்ளார்.
தற்போதைய செயல்களைப் பற்றி பேசாமல், 60 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நேருவைப் பற்றி பேசுவதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னவாயிற்று எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்.5) பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அதில், நேருவைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் அறிவாற்றல் குறைந்தவர்களாக நேரு நினைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் மக்களவை உரை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடி ஒரே பேச்சையே திரும்பத் திரும்ப பேசுகிறார். அவர் எதையோ செய்துவிட்டதைப்போன்று பேசுகிறார். அதுதன் எனக்கு புரியாத புதிராக உள்ளது. பிரதமர் மோடியின் சொற்பொழிவாற்றும் திறனை மதிக்கிறோம். ஆனால் இன்று அதுவும் சற்று குறைவுதான். நாங்கள் எதிர்பார்த்த அளவிலான பேச்சை அவர் கொடுக்கவில்லை. ஒரே விஷயத்தைத்தான் நகலெடுக்கிறார். நேரு இறந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. நடைமுறை அரசியலைப் பேசாமல், இன்னும் நாடாளுமன்றத்தில் நேருவைப் பற்றியே பேசுகிறார். பிரதமருக்கு என்னவாயிற்று? அவருக்கு சற்று புத்துணர்ச்சி தேவை எனக் குறிப்பிட்டார்.