வரும் ஜனவரி 22ஆம் நாள் நடைபெறவிருக்கும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில், காங்கிரஸ் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌதிரி ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அந்த அழைப்புகள் குறித்த முடிவுகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அந்த நிகழ்வில் பங்கேற்காது என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'கடவுள் ராமரை பல லட்சம் மக்கள் வழிபடுகிறார்கள். மதம் என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட விசயம். ஆனால் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் ராமர் கோயிலை அரசியல் படுத்திவருகிறது.
முழுதாகக் கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு திறப்புவிழா நடத்துவதற்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே காரணம். எனவே இந்த அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் மரியாதையுடன் மறுக்கின்றனர். மேலும் இது பாஜகஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் காண்கிறது எனக்கூறி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரியும் அழைப்பை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.