பிரதமர் மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார், இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மோடி நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ஆளுநர் மாளிகை வரை பிறபகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, எஸ்வி பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் 8 மணி வரை இடையே மாற்று வழித்தடங்களில் செல்ல கீழ்க்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்படும்.
அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்யில் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்ஆர்டி புதிய பாலத்திலிருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையிலிருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர்ஸ் ரோடு ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(ட்க்டர் அழகப்பா சாலை - ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாகச் சென்றடையலாம்.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.