உத்தரப் பிரதேசத்திலும், மகாராஷ்டிரத்திலும் மக்களவைத் தொகுதிகள் அதிகம் இருப்பதால் மோடி அடிக்கடி வருகிறார் என்று சஞ்சய் ரௌத் கூறினார்.
கடந்த 13 மாதங்களில் எட்டு முதல் பத்து முறை மகாராஷ்டிராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூருக்கு செல்லவில்லை என்று சிவசேனை உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ரௌத் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | ஒடிசாவில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத், “பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிர மாநிலத்திற்கு மீண்டும் மீண்டும் வருகிறார். அதற்காக அவர் மகாராஷ்டிர மாநிலத்தை நேசிப்பதாக அர்த்தம் கிடையாது. அதேபோல, உத்தரப் பிரதேசத்திற்கும் அடிக்கடி செல்கிறார். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தையும் நேசிக்கவில்லை.
எதற்காக இங்கெல்லாம் அடிக்கடி செல்கிறார் என்றால் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். அதனையடுத்து மகாராஷ்டிராவில் அதிகம். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொருத்துதான் மோடி வருகை புரிவார்.
2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் முக்கிய பங்கு வகிக்கும். இங்குள்ள மாநில அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. இங்கு பாஜகவினரால் வாக்கு பெற முடியாது.
கடந்த 13 மாதங்களில் எட்டு முதல் பத்து முறை மகாராஷ்டிர மாநிலத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.