தில்லியின் புராரி பகுதியில் ஒன்றரை வயது குழந்தையை பிட்புல் நாய் கடித்து குதறிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உரிமையாளருடன் தெருவில் நடந்து சென்ற பிட்புல் நாய் திடீரென அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தையைக் கடித்துள்ளது. அருகிலிருந்த அக்குழந்தையின் குடும்பத்தினர் நாயிடம் இருந்து குழந்தையை மீட்க எவ்வளவோ முயன்றும் அந்த நாய் குழந்தையை விடாமல் கடித்து இழுத்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஒன்றரை வயது குழந்தைக்கு 18 தையல்கள் போடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் குழந்தை 17 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. குடும்பத்தினரின் கண்முன்னே குழந்தையை நாய் கடித்த இந்த சம்பவம் ஜனவரி 2ம் தேதி நடந்துள்ளது. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்த விடியோவில் எட்டு பேர் வரை அந்நாயிடம் இருந்து குழந்தையை மீட்கப் போராடுகின்றனர். இருப்பினும் அந்த நாய் குழந்தையை கடிப்பதை நிறுத்தவில்லை.
அந்த நாயின் உரிமையாளரே அதனை அடித்து இழுத்தும்கூட, அவரின் பேச்சை அந்த நாய் சிறிதும் கேட்காமல் குழந்தையை கடிக்கிறது. சில நிமிடங்கள் நாயிடம் போராடிய குடும்பத்தினர் ஒருவழியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து புராரி காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது அதனை ஏற்க காவல்துறையினர் மறுத்துள்ளனர். அக்குழந்தையின் குடும்பத்தினர் விடியோ காட்சிகளை சமர்ப்பித்தும் கூட வழக்கு பதிய மறுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
பிட்புல் நாய் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாய் வகையைச் சேர்ந்ததாகும். இந்த வகை நாய்கள் அதன் உரிமையாளரையே கடித்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.