பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கெதிரான மனநிலையில் உள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கடந்த டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது.
இதையும் படிக்க | பெங்களூருவில் பள்ளிக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
இதனையடுத்து பாஜக தலைமையிலான மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட குடியரசு தினத்திற்கான பஞ்சாப் மாநிலத்தின் அணிவகுப்பானது பஞ்சாப் மாநிலம் முழுவதும் வலம் வரும் என்று பகவந்த் மான் ஜன.9ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் குடியரசு தினமான இன்று (ஜன.26) மீண்டும் இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “மத்திய அரசின் குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப் இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
பஞ்சாபின் சார்பில் அனுப்பப்பட்ட அணிவகுப்பை சற்றுமுன்பு நீங்கள் பார்த்தீர்கள். இதில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களும், நமது வரலாற்றைச் எடுத்துக்கூறும் வகையிலான படங்களும் இடம் பெற்றிருந்தன. இவை இல்லாமல் நமது குடியரசு தினத்தைக் கொண்டாட முடியாது.
இருப்பினும் இந்தப் பரிந்துரை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பஞ்சாப் மாநிலத்திற்கெதிரான மனநிலையைக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாஜக கூட்டணிக்கு மாறுகிறாரா நிதீஷ் குமார்? காட்சியும் மாறுமே?
முன்னதாக, குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தது. இந்த மூன்றுமே எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.