பாஜக கூட்டணிக்கு மாறுகிறாரா நிதீஷ் குமார்? காட்சியும் மாறுமே?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், விரைவில் பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
நிதீஷ் குமார் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பிகார் முதல்வர் நிதீஷ் குமார், விரைவில் பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

பிகாரிலும் பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு அடுத்த வாரமே புதிய அமைச்சரவை அமைந்தாலும் சொல்வதற்கில்லை என்றே அரசியல்வட்டாரங்கள் பரபரக்கின்றன.

சில மாதங்கள் வரை, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆவதற்கு வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிதீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் பாஜக கூட்டணியில் இருந்து வந்தார். 2022ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து பிகாரில் ஆட்சியமைத்தார்.

இந்தியா கூட்டணி உருவாக மிக முக்கிய காரணகர்த்தாவாகவும் இவரே இருந்தார். அதனால்தான் அவர் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டதும் அதிருப்தியடைந்தார்.

இதனுடன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீடுக்கு ஒத்து வராமலிருக்கும் நிலையில், நிதீஷ் குமாரும் அதிருப்தியில் உள்ளார்.

இந்த நிலையில்தான், மத்திய அரசை நிதீஷ் குமார் பாராட்டியதும், வாரிசு அரசியலை கடுமையாக சாடியதும் பேசுபொருளாகியிருக்கிறது. அவர் லாலுவின் குடும்பத்தையே மறைமுகமாக பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், லாலுவின் மகள் கோபத்தில் நிதீஷ் குமாரை விமரிசித்து பதிவிட, அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், தனது பதிவையும் நீக்கியிருந்தார்.

இதனால்தான், நிதீஷ் குமார், அடுத்து ஒரு யு டர்ன் அடித்து மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும், பிகார் சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு மக்களவைத் தேர்தலுடன் பாஜகவுடன் கைகோர்த்து பேரவைத் தேர்தலையும் சந்திக்கலாம் என்ற கருத்தும் ஓங்கி ஒலிக்கிறது.

மறுபக்கம், பிகார் பாஜக மாநில தலைவர்களோ, மீண்டும் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கக் கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்பதாகவும், கிடைக்காவிட்டால் போகிறது, மத்திய அமைச்சராகிவிடுவேன் என்று நிதீஷ் குமார் நினைப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கே கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே உறுதி செய்யப்பட்டால், வரும் வாரத்தில் பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போது அதே மேடையில் நிதீஷ் குமாரும் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் நடக்கும்பட்சத்தில் பத்து ஆண்டுகளில் நிதீஷ் குமார் செய்யும் 4வது கூட்டணி மாற்றம் இது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com