
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த ராகுல் காந்தியை கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
கடந்த வாரம் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசியபடி, குஜாரத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மாநில கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
குஜராத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. எனவே, குஜராத்தில் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் சென்று கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் நிர்வாகிகளை ஈடுபடுத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
மாநில கட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி கட்சியை மேம்படுத்தும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை முதல் ராகுல் காந்தி, தற்போது 4 ஆவது முறையாக குஜராத் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினர் நிறைந்த ஆரவல்லியின் மொடாசா பகுதியில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி இன்று உரையாற்றுகிறார். முன்னதாக ஆமதாபாத் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.