
உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை மூழ்கடித்துள்ள நிலையில், வீட்டுக்குள் வந்த கங்கைக்கு பல விதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.
வீட்டின் முதல் தளத்திலும், வீட்டைச் சுற்றிலும் கங்கை ஆறு மூழ்டித்துக் கொண்டிருந்த வேளையில், எங்கிருந்தோ வந்து மக்கள் கங்கையில் நீராடி வரும் நிலையில் வீட்டுக்கே வந்த கங்கையை விட்டுவிடுவதா என்று எண்ணி, கங்கைக்குள் குதித்து நீராடி, வணங்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.
காவல் ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத், ஒரே நாளில் இணையதள மக்களுக்கு மிகவும் பரிச்சயமாகிவிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இவரது வீடும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.
எனது வாழ்க்கையில் இந்த கங்கை நதி பல்வேறு விஷயங்களை எனக்குத் தந்திருக்கிறது. எப்போதும் கங்கையை வணங்கிவிட்டே எதையும் செய்வேன். அதனால்தான் இந்த கங்கை நதியை நான் இவ்வளவு விரும்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கங்கை வெள்ளத்தில் குதித்து அவர் நீந்தும் விடியோக்கள் வைரலாகி வருகிறது.
அதுபோலவே, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மறறொரு காவல்துறை அதிகாரி, வீட்டுக்குள் வந்திருக்கும் கங்கை வெள்ளத்துக்கு மலர்களைத் தூவியும், பால் ஊற்றி அபிஷேகம் செய்து பூஜித்த விடியோவும் வெளியாகியுள்ளது.
அவரது வீட்டு வாயிலில் நின்றுகொண்டு பூஜை செய்தாலும், வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கிறது. முதல் மாடியிலிருந்து இறங்கி வந்து அவர் வீட்டுக்கு வந்த கங்கைக்கு பூஜைகள் செய்யும் விடியோவும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.