
உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரே ஒருவர் மட்டும் வெள்ளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்த விடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கீர்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை அடித்துக் கொண்டு சென்றது. ஒரு நொடியில், அங்கிருந்த வீடுகள், கட்டடங்கள், கடைகள் என அனைத்தையும் தன்னுடைய ஆக்ரோஷ சப்தத்துடன் வெள்ளம் வாரிச் சுருட்டிச் சென்றது. ஒரு சில வினாடிகளில் எதுவும் இருந்த இடத்தில் இல்லை. இந்த காட்சிகளை இணையம் மூலம் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு அவ்வளவு அதிர்ச்சி.
இந்த நிலையில்தான், வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் உயிரோடு எழுந்து நடந்து வரும் விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.
இதுவரை 50 பேர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 150 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் இறங்கியிருக்கிறார்கள். அங்கே இருந்த ராணுவ முகாமும் பலத்த சேதமடைந்துள்ளது. ஒரு சில வீரர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
தாராலியின் பெரும்பாலான பகுதிகள் 20 - 25 அடி உயர வெள்ளச் சேறில் சிக்கியிருக்கிறது. இதனால், மீட்புப் பணிகள் சவாலாக மாறியிருக்கிறது. உயிர்களைக் காக்க, மீட்புப் படையினர் கடுமையான சிரமங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 600 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.