
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனக்பூர் ஷரிப் கிராமத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வோர், அந்த கிராமத்திலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழத் தடை செய்யும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டளள்து.
மொஹாலி மாவட்டம் மனக்பூர் கிராம பஞ்சாயத்தினர் ஒருமனதாக நிறைவேற்றிய இந்த தீர்மானம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், 26 வயது இளைஞர், உறவினரின் 24 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, கிராமத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 31ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காதல் திருமணம் செய்ய விரும்புவோர், பெற்றோர் மற்றும் தங்கள் சமுதாய மக்களின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு பெறாமல் காதல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. செய்துகொண்டால் இந்த கிராமத்தில் வாழ்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்கிறது அந்த தீர்மானம்.
மேலும், காதல் திருமணம் செய்பவர்களுக்கு யாரேனும் உதவி செய்தாலோ, தங்குவதற்கு இடமளித்தாலோ அதுவும் குற்றமாகவே கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தண்டனை அல்ல, எங்கள் கலாசாரத்தை மற்றும் வாழ்வியல் முறையின் மதிப்பை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர் தல்விர் சிங் கூறுகிறார்.
அண்மையில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு ஓடிவிட்டனர். ஆனால், இந்த சம்பவம் சுமார் 2000 கிராம மக்களை பாதித்துள்ளது. நாங்கள் காதல் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால், எங்கள் கிராமத்தில் அவ்வாறு நடக்க வேண்டாம் என்கிறோம் என்று தெளிவாகக் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.