
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குல்காம் மாவட்டத்தின் அகல் காடுகளில் பயங்கரவாதிகளுடனான கடுமையான துப்பாக்கிச் சூட்டில் லான்ஸ் நாயக் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியான, ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அங்கு இரண்டு பயங்கரவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதால், அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்தின் வொயிட் நைட் கார்ப்ஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.