ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்
‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவைச் சோ்ந்த கேப்லா் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. உக்ரைனுடனான போரில் ரஷியா ஈடுபட்டு வரும் சூழலில் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஈடுபட்டு, போருக்கு நிதி கிடைக்குமாறு செய்து வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தாா்.
இந்நிலையில், இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்தாா். இந்த வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது.
இதுதொடா்பாக கேப்லா் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார ரீதியாகவும் வா்த்தக ரீதியாகவும் பெரும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரஷியா அளித்த அதீத சலுகையாலும் அந்நாட்டு கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு உள்கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருப்பதாலும் அங்கிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் என இரண்டும் இதனால் பலனடைந்தன.
ரஷியாவைத் தவிர பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை வேறுபாடு 5 அமெரிக்க டாலருக்கும் மேல் உள்ளதாக இந்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தற்போது ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு இறக்குமதி செய்யப்படும் 18 லட்சம் பீப்பாய்களுக்கு மாற்றாக வேறு நாட்டில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.26,200 கோடி முதல் ரூ.43,700 வரை வரை கூடுதலாக செலவிடும் சூழல் ஏற்படும்.
குறிப்பாக ரஷியாவுக்கு மாற்றாக வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் உள்ள நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுப்பதோடு உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட்டால் ஆண்டுக்கு ரூ.61,300 கோடி முதல் ரூ.96,300 கோடி வரை இந்தியா கூடுதலாக செலவிட நேரிடும்.
ரஷியாவுக்கு மாற்றாக மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே ஈடுகட்ட முடியும்.
ஆனால், இவை யாவும் ரஷிய கச்சா எண்ணெயின் சலுகை விலை மற்றும் தரத்துக்கு ஈடாகாது. இதனால் வா்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.