
உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்டின் டெஹ்ராடூன், தெஹ்ரி, பௌரி, ஹரித்வார், உத்தம் சிங் நகர், நைனிடல் மற்றும் பாகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் ஆக.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள், தேவைப்பட்டால் அங்கிருந்து வெளியேறுவதற்குத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், மாவட்ட நிர்வாகம் பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு ஆலோசனை வழங்கிய நிலையில், அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளம் ஏற்படும் அபாயம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த ஆக.5 ஆம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீரென வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
இத்துடன், அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமான 66 பேரை தேடும் பணிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.