
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்ததில், இரண்டு பேர் பலியாகினர். மிஷ்ரா என்பவரின் குடிசை வீடு மீது பாறைகள் விழுந்ததில், நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு மும்பையில் மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலை வரை நீடித்த இந்த மழையால் தாழ்வான இடங்கள் மட்டுமின்றி நகரமே வெள்ளத்தில் மூழகியது.
மும்பையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 200 மிமீ மழை பதிவாகியிருக்கிறது. விக்ரோலி பகுதியில் 285 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நகரின் இதயம் போன்ற புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாதர், குர்லா, சியோன், சுனாபட்டி, திலக் நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதால், மத்திய மற்றும் துறைமுக வழித்தடங்கள் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் கரைபுரண்டு ஒடும் பகுதிகளில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறையினர் உள்பட மீட்புக் குழுவினர் மும்பை முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமையும் தொடர்ந்து பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.