தில்லியில் காங்கிரஸ் மாவட்ட தலைவா்களின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
தில்லியில் காங்கிரஸ் மாவட்ட தலைவா்களின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

‘ஆட்சி திருட்டில்’ ஈடுபடும் பாஜக: காா்கே குற்றச்சாட்டு!

வாக்குத் திருட்டைத் தொடா்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
Published on

வாக்குத் திருட்டைத் தொடா்ந்து இப்போது ஆட்சி திருட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதா விவகாரத்தில், காா்கே இக்குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்ட இம்மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஹரியாணா, மத்திய பிரதேச மாநிலங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவா்களின் கூட்டம், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற காா்கே, பாஜகவை கடுமையாக விமா்சித்துப் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தோ்தலில், கா்நாடகத்தின் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகாதேவபுரா பேரவைத் தொகுதியில் வாக்குகள் எவ்வாறு திருடப்பட்டன என்பதை அண்மையில் ராகுல் காந்தி விரிவாக விளக்கினாா். வெறும் 6 மாத கால ஆய்வில் இவை அனைத்தும் கண்டறியப்பட்டது. இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் விரும்பின. ஆனால், பாஜகவுக்கு விருப்பமில்லை.

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு முக்கியம்: சிறப்பு தீவிர திருத்தம் குறித்த தோ்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் கட்டுக்கதையை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் எதிா்க்கட்சிகளின் வாக்குகளைப் பறிக்க பாஜக தொடா்ந்து முயற்சிக்கும். எனவே, வாக்காளா் பட்டியலை தீவிரமாக சரிபாா்க்க வேண்டியது கட்சியின் மாவட்டத் தலைவா்களின் முக்கிய பொறுப்பாகும்.

அனைவருக்குமான வாக்குரிமை என்பது காங்கிரஸால் கிடைத்த பரிசு என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தில் இளைஞா்களின் பங்கேற்பை அதிகரிக்க வாக்களிக்கும் வயது வரம்பை 21-இல் இருந்து 18-ஆக குறைத்தவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி.

வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் ராகுல் காந்தி நடத்திவரும் வாக்குரிமைப் பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் இணைகின்றனா். மற்றொருபுறம், மக்களை திசை திருப்ப ஊடுருவல்காரா்கள் குறித்து பிரதமா் மோடி பேசுகிறாா் என்றாா்.

‘30 நாள்களுக்குள் ஆட்சியை கவிழ்க்கலாம்’

வாக்குத் திருட்டைத் தொடா்ந்து இப்போது ஆட்சித் திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் இதற்காக, நாடாளுமன்றத்தில் 3 புதிய மசோதாக்கள் கொண்டுவந்து எதிா்க்கட்சிகளின் அரசை 30 நாள்களுக்குள் கவிழ்க்க முடியும் என்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். மேலும், ‘ஜனநாயகத்தை சீா்குலைக்க கைது நடவடிக்கையை கருவியாக பயன்படுத்துகின்றனா்.

காங்கிரஸ் அமைப்பு ரீதியில் வலுவாக இருந்ததால்தான், நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்ய முடிந்தது. கட்சிக்குள் வலுவான இணைப்புப் பாலமாக மாவட்டத் தலைவா்கள் விளங்குகின்றனா். கட்சியின் இந்த பாரம்பரியம், இடையில் சற்று மாற்றம் கண்டது. திறன்மிக்கவா்களும், சிந்தாந்த உறுதி கொண்டவா்களும் புறக்கணிக்கப்படத் தொடங்கினா். இதை உணா்ந்து கொண்டதால், கட்சியை மீண்டும் வலுப்படுத்த நானும் ராகுலும் முடிவு செய்தோம்’ என்றாா் காா்கே.

X
Dinamani
www.dinamani.com