
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.
ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்கோரி, நீதித்துறையின் மிக மூத்த உறுப்பினரிடமிருந்த வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட பெருநிறுவன திவால்நிலை தீர்வு செயல்முறை கோரிய வழக்கிலிருந்துதான் நீதிபதி விலகியிருக்கிறார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி, நீதிபதி ஷர்மா இந்த புகாரைத் தெரிவித்து வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை அறிவித்திருக்கிறார்.
திவால் கோரிய வழக்கு ஒன்றில், நீதித்துறையின் முக்கிய பொறுப்பில் உள்ள உறுப்பினரிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அமர்விலிருந்து நீதிபதி சரத் குமார் ஷர்மா விலகியதைத் தொடர்ந்து, அந்த வழக்கு, வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீதித்துறையின் செயல்பாடுகள் மிகுந்த கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
நீதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பிலிருக்கும் உறுப்பினர் ஒருவர், என்னை அணுகி, திவால் வழக்கில், ஒரு தரப்பினருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும்படி கூறினார். இதனால், அதிருப்தி அடைந்த நான், இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று ஆகஸ்ட் 13 அன்று சரத் குமார் ஷர்மா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, இதுபோன்று ஸ்ரீ ராமலிங்க மில்ஸ் நிறுவன வழக்கிலிருந்தும், வெளியிலிருந்து அழுத்தம் வந்ததாகக் கூறி, நீதிபதி சரத் குமார் ஷர்மா கடந்த ஜூன் மாதம் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார் என்பதும், கடந்த ஆண்டு், ஜேப்பியார் சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணையின்போதும், சொந்த சகோதரரிடமிருந்து வந்த அழுத்தத்தால், வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.