மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!
மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லையில், 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் நாரயணப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள, மகாராஷ்டிராவின் கத்சிரோலி மாவட்டத்தில் உள்ள கோபார்ஷி வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு கடந்த ஆக.25 ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கத்சிரோலி காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் 2 குழுக்களும் இணைந்து அப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கடந்த 2 நாள்களாக பெய்து வரும் கனமழைக்கு இடையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக.27) காலை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையானது சுமார் 8 மணிநேரம் நீடித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன், 3 பெண்கள் உள்பட 4 நக்சல்களின் உடல்களை, பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், கோபார்ஷி வனப் பகுதியில், நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!
4 Naxals have been shot dead by security forces on the border of Maharashtra and Chhattisgarh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.