

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து மக்களவை முதலில் பகல் 12 மணிவரை, பின்னர் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், பிற்பகலிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.