

இண்டிகோ விமான சேவை பாதிப்பால் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமானக் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஓய்வு விதிகளால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையில் இன்று 5 ஆவது நாளாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்றும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் விமான சேவை ஓரிரு நாள்களில் சீராகும் என்றும் விமான நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதனிடையே இண்டிகோ விமான சேவை பாதிப்பால் மற்ற விமான நிறுவனங்கள் விமானக் கட்டணத்தை உயர்த்தின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, விமானக் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது.
விமான நிறுவனங்கள், விமானக் கட்டணங்களை உயர்த்தியதற்கு கவலை தெரிவித்துள்ள அமைச்சகம், விமானக் கட்டணங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நிலைமை சீராகும் வரை இந்த விமானக் கட்டண உச்ச வரம்பு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.
விமான நிறுவனங்கள் இந்த கட்டண உச்ச வரம்பை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், அதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் எந்தவித இடையூறும் இன்றி பயணிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணத்தை எந்த தாமதமும் இன்றி நாளைக்குள்(டிச. 7) இரவு 8 மணிக்குள் பயணிகளுக்கு திருப்பியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.