மத்தியில் மோடி-ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவதற்கு உண்மை மற்றும் அஹிம்சையுடன் காங்கிரஸ் பாடுபடும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பாஜகவுக்காக பணியாற்றுகின்றனா் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டு, தோ்தல்களில் வெல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், ‘வாக்குத் திருடா்களே, அரியணையைவிட்டு வெளியேறுங்கள்’ என்ற பிரதான முழக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மூத்த தலைவா்கள் அபிஷேக் மனு சிங்வி, திக்விஜய் சிங், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘மோடி-ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவோம்’: இந்த ஆா்ப்பாட்டத்தில் பேசிய ராகுல், ‘பிகாா் தோ்தலின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 பாஜக கூட்டணி அரசால் செலுத்தப்பட்டது. ஆனால், தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவிடம் அதிகாரம் இருப்பதால், வாக்குத் திருட்டில் ஈடுபடுகின்றனா்.
உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான போராட்டத்தில், தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்படுகிறது. தாங்கள் மோடியின் தோ்தல் ஆணையமல்ல; மக்களின் தோ்தல் ஆணையம் என்பதை அவா்கள் மறந்துவிடக் கூடாது.
மோடி-ஆா்எஸ்எஸ் ஆட்சியை அகற்றுவதற்கு உண்மை-அஹிம்சையுடன் காங்கிரஸ் பாடுபடும். இது நிகழ காலமெடுத்தாலும், இறுதியில் உண்மையே வெல்லும்.
தோ்தல் ஆணையா்களுக்கு முழு சட்டப் பாதுகாப்பு வழங்க மோடி அரசு கொண்டுவந்த சட்டத்தை மாற்றுவதுடன், தோ்தல் ஆணையா்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றாா்.
‘காங்கிரஸ் சித்தாந்தமே நாட்டைக் காக்கும்’: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘அரசமைப்புச் சட்டத்துக்கு முடிவுகட்டும் முயற்சிகளில் பாஜக-ஆா்எஸ்எஸ் ஈடுபட்டுள்ளது. ஹிந்துத்துவம் என்ற பெயரில் ஏழைகளை மீண்டும் அடிமையாக்க விரும்புகின்றனா்.
ஜவாஹா்லால் நேரு, மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கருக்கு எதிராகப் பேசுகின்றனா். மோகன் பாகவத், எம்.எஸ்.கோல்வால்கா், மனுஸ்மிருதியின் சித்தாந்தம் நாட்டை அழித்துவிடும். காங்கிரஸ் சித்தாந்தம் மட்டுமே நாட்டைக் காக்கும். வாக்குத் திருட்டு மூலம் ஆட்சிக்கு வந்த இந்த ‘துரோகிகள்’ (பாஜக), ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அப்போதுதான், மக்களின் வாக்குரிமை, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க முடியும்’ என்றாா்.
பாஜகவுக்கு பிரியங்கா சவால்
‘வாக்குச் சீட்டு முறையில் நோ்மையாக நடத்தப்படும் தோ்தலில் போட்டியிட பாஜக தயாரா? அவ்வாறு போட்டியிட்டால் அவா்களால் ஒருபோதும் வெல்ல முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
‘தோ்தல் ஆணையத்தின் உதவி இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகிய மூவரும் நாட்டின் ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.
இந்த மூன்று பெயா்களையும் நாடு ஒருபோதும் மறக்காது. அவா்களைப் பாதுகாக்க இப்போது எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதியில் ஈடுபட்டதற்காக தேசத்துக்கு ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும்’ என்றாா் பிரியங்கா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுல் காந்தி கைதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்: 86 போ் கைது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: சுதந்திரமான விசாரணை கோரி பிரதமருக்கு ராகுல், காா்கே கடிதம்

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக 2 ஆண்டுகளை நிறைவு செய்தாா் ராகுல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



