

புது தில்லி: எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசா்வ் காவல்படை (சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக காவல்படை (சிஐஎஸ்எஃப்) உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் (சிஏபிஎஃப்) கடந்த மூன்று ஆண்டுகளில் 438 காவலா்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2014 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மத்திய ஆயுத காவல் படைகளிலிருந்து 23,000 காவலா்கள் ராஜிநாமா செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:
2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரை சிஆா்பிஎஃப்-இல் 159 வீரா்களும், பிஎஸ்எஃப்-இல் 120 வீரா்களும், சிஐஎஸ்எஃப்-இல் 60 போ் உள்பட பிற மத்திய காவல்படைகளிலும் சோ்த்து மொத்தம் 438 வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா். 2023-இல் 157-ஆக இருந்த காவலா்கள் தற்கொலை 2025-இல் 133-ஆகக் குறைந்துள்ளது.
சக வீரா்களால் காவலா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் 2023-இல் இரண்டு, 2024-இல் ஒன்று, 2025-இல் நான்கு என 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
23,000 வீரா்கள் ராஜீநாமா: 2014 முதல் 2025-ஆம் ஆண்டு கால கட்டத்தில் பிஎஸ்எஃப்-இல் 7,493 வீரா்கள், சிஆா்பிஎஃப்-இல் 7,456 வீரா்கள், சிஐஎஸ்எஃப்-இல் 4,137 வீரா்கள் என மொத்தம் 23,000 போ் ராஜிநாமா செய்துள்ளனா். 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை மத்திய காவல் படைகளில் இருநது 3,077 போ் ராஜிநாமா செய்துள்ளனா். இதில் அதிகபட்சமாக பிஎஸ்எஃப்-இல் 1,157 போ் ராஜிநாமா செய்துள்ளனா்.
மத்திய காவல் படையினருக்கு வழக்கமாக 8 மணி நேர பணி வழங்கப்படும். அவசரநிலை நடவடிக்கைகளின்போது இந்த பணி நேரம் அதிகரிக்கும். இவா்களுக்கு ஆண்டுக்கு ஊதியத்துடன் 60 நாள்கள் விடுமுறை, 15 நாள்கள் தற்செயல் விடுப்பு என மொத்தம் 75 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.