ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து ராகுல் காந்தி பதிவு...
ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்
Updated on
2 min read

ஒரே ஆண்டில் 20 ஆண்டுகால மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை மோடி அரசு தகர்த்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணாக இருக்கும் இத்திட்டத்தை அழிக்க விடமாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ (விபி - ஜி ராம் ஜி) சட்ட மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, விரைவில் விபி - ஜி ராம் ஜி சட்டமாக்கப்படவுள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“இருபது ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.

விபி - ஜி ராம் ஜி என்பது எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் ”மறுசீரமைப்பு” அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, தில்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.

எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் கிராமப்புற தொழிலாளிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்கியது. சுரண்டலும், இடம்பெயர்தலும் குறைந்தன, ஊதியங்கள் அதிகரித்தன, பணி நிலைமைகள் மேம்பட்டன. அதே சமயத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பும் புத்துயிர் பெற்றது. இவற்றையெல்லாம் இந்த அரசாங்கம் உடைக்க விரும்புகிறது.

வேலைக்கு வரம்பு விதிப்பதன் மூலமும், வேலையை மறுப்பதற்கு மேலும் பல வழிகளை உருவாக்குவதன் மூலமும், விபி - ஜி ராம் ஜி திட்டம் கிராமப்புற ஏழைகளிடம் இருந்த ஒரேவொரு கருவியை பலவீனப்படுத்துகிறது. கரோனா பெருந்தொற்றின்போது, பொருளாதாரம் முடங்கி, வாழ்வாதாரங்கள் சரிந்தபோது, கோடிக்கணக்கான மக்களை பசி மற்றும் கடனில் மூழ்குவதிலிருந்து தடுத்தது.

இத்திட்டமானது பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. ஆண்டுதோறும் பெண்களே பாதிக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப் பங்கீடு செய்யும்போது, பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.

அனைத்துக்கும் மேலாக எவ்வித ஆய்வுமின்றி நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை, ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒருபோதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.

பிரதமர் மோடியின் இலக்குகள் தெளிவாக உள்ளன. தொழிலாளர்களை பலவீனப்படுத்துவது, கிராமப்புற இந்தியாவில் குறிப்பாக தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் செல்வாக்கைப் பலவீனப்படுத்துவது, அதிகாரத்தை மையப்படுத்துவது. பின்னர், சீர்திருத்தம் எனக் கூறி விற்பது.

எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Last night, the Modi government demolished twenty years of MGNREGA in one day - Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com