

மத்திய நிதிநிலை அறிக்கை வழக்கமாக பிப். 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாற்றுத் தேதியில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில், 2026 - 27 நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்த தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
புதுதில்லியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறையின் பங்குதாரர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2017 முதல் தொடர்ந்து பிப். 1 ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்து வரும் நிலையில், வருகின்ற ஆண்டில் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றது.
மேலும், அன்று குருரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? அல்லது பிப். 2 ஆம் தேதிக்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
விடுமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
கடந்த ஆண்டு பிப். 1 ஆம் தேதி சனிக்கிழமை வந்த நிலையில், அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வார இறுதி நாள்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், பங்குச் சந்தைகள் எதிர்வினையாற்ற முடியாத நிலை ஏற்படும் என்பதால் அவர்களிடம் இருந்தும் மத்திய அரசு கருத்துகேட்கும்.
அதன்படி, கடந்தாண்டு சனிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினம் பங்குச் சந்தையும் செயல்பட்டது.
இதற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, இரண்டு முறை (பிப். 28, 2015 மற்றும் பிப். 27, 2016) சனிக்கிழமைகளில் நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.
அதன்பின்னர், 2017 முதல் தொடர்ச்சியாக பிப். 1 ஆம் தேதிதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இடையில், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டுகள் மட்டுமே ஜூலை மாதத்தில் அந்த ஆண்டுகளுக்கான முழு பட்ஜெட் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து பெரும்பாலும் பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளன்று மாலை 5 மணிக்கே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், 1999 ஆம் ஆண்டு காலை 11 மணிக்கு நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா தாக்கல் செய்தார். பின்னர், பிப். 1 ஆம் தேதிக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை அருண் ஜெட்லி கொண்டுவந்தார்.
இந்திய வரலாற்றில் யஷ்வந்த் சின்ஹா மட்டுமே ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த வரலாற்றில் நிர்மலா சீதாராமனும் இணைவாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.