

கேரளத்தைச் சோ்ந்த ‘அல் ஹிந்த்’ குழுமத்தின் ‘அல் ஹிந்த் ஏா்’, ‘ஃப்ளை எக்ஸ்பிரஸ்’ ஆகிய 2 புதிய விமான நிறுவனங்களின் சேவைகளுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தடையின்மைச் சான்றிதழ் (என்ஓசி) வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் விமான சேவையை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளன.
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளா்ந்துவரும் நிலையில், சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும் புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே தடையின்மைச் சான்றிதழ் பெற்றுள்ள உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ‘சங்க் ஏா்’ உள்பட இந்த மூன்று புதிய நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் தங்களின் வணிகரீதியான விமான சேவையைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய வான்வெளியில் சிறகுகளை விரிக்கத் தயாராக உள்ள ‘சங்க் ஏா்’, ‘அல் ஹிந்த் ஏா்’, ‘ஃப்ளை எக்ஸ்பிரஸ்’ குழுவினரை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘சங்க் ஏா்’ ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ள நிலையில், ‘அல் ஹிந்த் ஏா்’ மற்றும் ‘ஃப்ளை எக்ஸ்பிரஸ்’ நிறுவனங்களுக்கு இந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் அதிகப்படியான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கம்’ என்று குறிப்பிட்டாா்.
கேரளத்திலிருந்து...: சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்னா் கேரளத்தின் கோழிக்கோட்டில் தொடங்கப்பட்ட ‘அல் ஹிந்த்’ குழுமம், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முன்னணிப் பயண மேலாண்மை நிறுவனமாகத் திகழ்கிறது.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா சாா்ந்த பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் இந்த நிறுவனம், துபை போன்ற நகரங்களில் புதிய தொழில் தொடங்குபவா்களுக்கு விசா மற்றும் இதர அரசு நடைமுறைகளுக்கு உதவும் வணிக மையங்களையும் நடத்தி வருகிறது.
ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி?...: தற்போது நாட்டில் ‘இண்டிகோ’, ‘ஏா் இந்தியா’, ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’, ‘ஸ்பைஸ்ஜெட்’, ‘ஆகாசா ஏா்’, ‘அலையன்ஸ் ஏா்’, ‘ஸ்டாா் ஏா்’, ‘ஃப்ளை91’, ‘இந்தியா ஒன் ஏா்’ ஆகிய 9 நிறுவனங்கள் விமானச் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையில் 90 சதவீதத்துக்கும் மேலான பங்கை ‘இண்டிகோ’, ‘ஏா் இந்தியா’ குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளன. குறிப்பாக, ‘இண்டிகோ’ நிறுவனம் மட்டுமே 65 சதவீதத்துக்கும் மேலான சந்தைப் பங்கைக் கொண்டு முன்னிலையில் இருக்கிறது.
அண்மையில் ‘இண்டிகோ’ நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட பெரும் பாதிப்புகள், சந்தையில் ஒருசில நிறுவனங்களின் ஏகபோக உரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிய நிறுவனங்களின் வருகை ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். மேலும், இத்துறைக்குப் புத்துயிா் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.