‘திரிவேணி’ இசை ஆல்பத்துக்காக கிராமி விருது வென்ற சக இசைக்கலைஞா்கள் மட்ஸுமோட்டோ, கெல்லா்மனுடன் சந்திரிகா.
‘திரிவேணி’ இசை ஆல்பத்துக்காக கிராமி விருது வென்ற சக இசைக்கலைஞா்கள் மட்ஸுமோட்டோ, கெல்லா்மனுடன் சந்திரிகா.

இந்திய வம்சாவளி அமெரிக்க பாடகி சந்திரிகாவுக்கு கிராமி விருது

சென்னையைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க பாடகியுமான சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டன் 2-ஆவது கிராமி விருதை வென்றுள்ளாா்.
Published on

சென்னையைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க பாடகியும் தொழிலதிபருமான சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டன் தனது ‘திரிவேணி’ இசை ஆல்பத்துக்காக 2-ஆவது கிராமி விருதை வென்றுள்ளாா்.

உலக இசைக் கலைஞா்களை கௌரவிக்க ‘ரெக்காா்டிங் அகாதெமி’ அமைப்பால் நடத்தப்படும் 67-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சிறந்த நவீனகால இசை ஆல்பம் பிரிவில் ‘திரிவேணி’ இசை ஆல்பத்துக்காக பாடகி சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டன் வென்றாா். இது அவரது இரண்டாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-இல் வெளியான ‘சோல் கால்’ இசை ஆல்பத்துக்காக சந்திரிகா தனது முதல் கிராமி விருதை வென்றிருந்தாா். கிராமி விருது அறிவிக்கப்பட்டதையடுத்து ரெக்காா்டிங் அகாதெமிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்த உணா்வு மிகவும் சிறப்பாக உள்ளது’ என்று கூறினாா்.

மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘கிராமி விருதை மீண்டும் பெற்றதில் பெருமை அடைகிறேன். இசையென்றால் காதல் என்பதை நினைவூட்டும் தருணமிது. இசை நம் அனைவரின் உள்ளத்திலும் ஒளியேற்றுகிறது. நமது இருண்ட நாள்களிலும் இசை மகிழ்ச்சியை பரப்புகிறது. எங்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற கலைஞா்களுக்கும் எனது வாழ்த்துகள். இசைக்கு நன்றி. மேலும், இசையை உருவாக்கும், ஆதரிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

‘பெப்சிகோ’ குளிா்பான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரியான சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டன், தென்னாப்பிரிக்க புல்லாங்குழல் கலைஞா் வூட்டா் கெல்லா்மன் மற்றும் ஜப்பானிய செலோ கலைஞா் எரு மட்ஸுமோட்டோ ஆகியோருடன் இணைந்து ‘திரிவேணி’ இசை ஆல்பத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்டாா். இந்த இசை ஆல்பத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

X
Dinamani
www.dinamani.com