
தில்லியில் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் யமுனையை சுத்தமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறியிருந்தார் அரவிந்த் கேஜரிவால், ஆனால் இன்னமும் அது அசுத்தமாகவே இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நேரடியான தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தில்லியில் புதன்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அரவிந்த் கேஜரிவாலை தாக்கிப் பேசும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில், யமுனை ஆற்றை சுத்தம் செய்வதாக முன்னாள் தில்லி முதல்வரின் முந்தைய வாக்குறுதியை சுட்டிக்காட்டி, அவரை ஆற்றில் குளிக்கும்படி சவால் விடுத்தார்.
மேலும், கறுமை நிறத்தில் இருந்த யமுனை ஆற்றின் நீரை ஒரு சின்ன பாட்டிலில் அடைத்து கையில் வைத்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, யமுனை ஆற்றின் ஒரு சொட்டு நீரைப் பருகுங்கள் அரவிந்த் கேஜரிவால். உங்களை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தான் புதிய அரசியல் முறையைக் கொண்டு வருவேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும், யமுனையை 5 ஆண்டுகளில் சுத்தமாக்குவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இன்னமும் யமுனை அசுத்தமாகவே உள்ளது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.