
பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித், பிரதமர் மோடியை சந்தித்திருப்பது கவலை அளிப்பதாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் கூறினர்.
2025 புத்தாண்டையொட்டி, பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ், புதன்கிழமை (ஜன. 1) பிரதமரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ``தில்ஜித் தோசன்ஜ் பன்முகத்திறமை வாய்ந்தவர்’’ என்று கூறினார். தொடர்ந்து, பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்கமுடியாதது என்று தில்ஜித் பதிவிட்டார்.
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தில்ஜித், தற்போது பிரதமர் மோடியை சந்தித்திருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக போராட்டம் நடத்தும் விவசாயிகள் விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுவதாவது, ``தில்ஜித் உண்மையிலேயே விவசாயிகளின்மீது அக்கறை கொண்டிருந்திருந்தால், சம்பு எல்லையில் எங்களுடன் இணைந்திருப்பார். எங்கள் கவலைகளைக் கேட்டு, அவரது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்றிருப்பார். ஆனால், பிரதமர் மோடியை சந்திப்பது அவரது நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது’’ என்று தெரிவித்தனர்.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் பஞ்சாப் விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.