
பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பிகாா் மாநிலம், கயாஜியில் மாநில அரசு சாா்பில் ஊா்க்காவல் படைக்கான உடல்தகுதித் தோ்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 19 வயது இளம்பெண் ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அரைமயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்ததும், தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து காவல் துறையினா் அவா் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ஆம்புலன்ஸின் ஓட்டுநா், தொழில்நுட்பப் பணியாளா் ஆகிய இருவரை கைது செய்தனா். தன்னை 4 போ் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளம்பெண் கூறியுள்ளாா். சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தேஜஸ்வி வலியுறுத்தல்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், நிதீஷ் குமாா் ஆட்சி அகற்றப்பட வேண்டும். ராட்சதா்களின் கையில் இருந்து பிகாரை விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பிகாரில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதற்கு கயாஜி சம்பவமே சாட்சி என்று மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் குமாா் சாடினாா்.
Bihar: Woman alleges gang rape in ambulance after fainting during govt recruitment exam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.