
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சியின் 11 ஆண்டு சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை நிகழ்ந்த மும்பை புறநகர் ரயில் விபத்தை குறிப்பிட்டு, மோடி அரசின் ஆட்சியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மோடி அரசு தனது 11 ஆண்டுகால "சேவையை” கொண்டாடும் வேளையில், மும்பையிலிருந்து வரும் துயரச் செய்தி நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. பலர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளனர்.
நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய ரயில்வே, இன்று பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே.
2025 பற்றி பேசுவதை அரசு நிறுத்திவிட்டு, 2024-க்கான கனவுகளை விற்று வருகின்றது. இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளை யார் பார்ப்பது?
மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாணேவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் நெரிசல் காரணமாக தவறி விழுந்த 5 பேர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.