கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரில் பைக் டாக்ஸி சேவை இனி இயங்காது
கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!
Published on
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது.

நாடெங்கிலும் பைக் டாக்ஸி சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம்(ஏ.என்.ஐ. டெக்னாலஜீஸ் பிரைவே லிமிடட்), ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடட், ரோப்பென் ட்ரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடட்(ரேபிடோ) மற்றும் பிற நிறுவனங்களால், கர்நாடகத்தில் ஏற்கெனவே ஒரு தனி நீதிபதியால் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கர்நாடகத்தில் அனைத்து பைக் டாக்ஸி சேவைகளையும் 9 வாரங்களுக்குள் நிறுத்த நீதிபதி பி. ஷ்யாம் பிரசாத் உத்தரவிட்டிருந்தார். இதற்கான கடைசி தேதி ஜூன் 15-ஆக நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பைக் டாக்ஸி சேவைகளுக்கு அரசு கொள்கை வகுக்க 3 வாரங்களுக்குள் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இவ்விவகாரத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க அரசு தரப்பில் முனைப்பு காட்டுவதால் கொள்கை வகுக்கப்படவில்லை. இதனால் பைக் டாக்ஸி இயங்க சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) வி. காமேஷ்வர் ராவ் மற்றும் ஸ்ரீநிவாஸ் ஹரீஷ் குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், கர்நாடக மாநில அரசிடமும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பிற தரப்புகளிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கத்தை ஜூன் 20-க்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 24-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரேபிடோ தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்தால் இதை நம்பியிருக்கும் 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு தரப்பு கொள்கை வகுக்க தயாராக இல்லாததைச் சுட்டிக்காட்டி தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை பயன்பாடு ஜூன் 16முதல் முடிவுக்கு வரவுவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com