

வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி-என்.சி.ஆர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை புழுதிப் புயலுடன் மூன்று மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் மதுராவின் பரபரப்பான சாலைகள் தண்ணீரில் மூழ்கின. மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக தில்லி விமான நிலையத்தில் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
200 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்களும் வேரோடு சாய்ந்தன. நஜாஃப்கரில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியாகினர். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கணவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து தில்லி தீயணைப்பு அதிகாரி கூறுகையில், நான்கு பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
உடேன அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றார். அதிகாலை 5 மணியளவில் தொடங்கிய மழை மூன்று மணி நேரத்திலேயே 77 மிமீ அளவு பெய்துள்ளது.
இதனிடையே நகரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மக்கள் மிகவும் விழிப்புடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம் உத்தரப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை மின்னல் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.