தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆஜர்!

தெரு நாய்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆஜரானார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் இன்று நேரில் ஆஜராகியிருக்கிறார்.

நாடு முழுவதும் தெருவில், நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடா்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத விவகாரத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து எந்தவொரு மாநில அரசு தலைமைச் செயலா்களுக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகியிருக்கிறார்.

முன்னதாக, காணொலிக் காட்சி மூலம் ஆஜராகலாமா என்று வைத்த கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பே இல்லை; பதில் மனு தாக்கல் செய்த மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு தலைமைச் செயலா்கள் வரும் நவம்பா் 3-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாய்க்கடி விவகாரம் குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தெருநாய்கள் விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த விவகாரத்தில் அனைத்து மாநில அரசு தலைமைச் செயலா்களும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு பதிலாக காணொலி வழியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இதைக் கேட்ட நீதிபதி விக்ரம் நாத், ‘மாநகராட்சி நிா்வாகமும் மாநில அரசும் பல ஆண்டுகளாக சரி செய்திருக்க வேண்டிய இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணும் முயற்சியில் நீதிமன்றம் தனது நேரத்தை வீணடித்து வருகிறது. இது மிகுந்த துரதிருஷ்டவசமானது. இப்பிரச்னையைக் கையாள நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த உத்தரவின் மீது மாநில அரசுகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பே இல்லை. எனவே, அனைத்து மாநில தலைமைச் செயலா்களும் நேரில் ஆஜராகட்டும். நாங்கள் அவா்களிடம் நேரடியாகவே விளக்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்று காட்டமாகவே கூறிவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட துஷாா் மேத்தா, ‘அனைத்து மாநிலங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றார்.

ஆனால், இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் அக்டோபா் 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் தில்லி மாநகராட்சி சாா்பில் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, பிற மாநில அரசு தலைமைச் செயலா்கள் அனைவரும் நேரில் ஆஜராகட்டும் என்று அறிவித்துவிட்டனர்.

நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

Summary

The Chief Secretary of Tamil Nadu appeared in the Supreme Court on the issue of stray dogs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com