

உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பு ஒரு முக்கிய காரணியாகும் என்றும், இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிறகு பேசினார்.
ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்து அவர் பேசியதாவது,
புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சி. உலகம் முழுவதும் வளர்ந்த நாடுகளில், பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் அவற்றின் உள்கட்டமைப்புதான். பெரிய முன்னேற்றத்தை அடைந்த ஒவ்வொரு நாட்டிலும், அதன் பின்னணியில் உள்ள உந்து சக்தி உள்கட்டமைப்பு மேம்பாடு.
உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளுடன் நிற்பதில்லை. அத்தகையa அமைப்புகள் எங்கும் உருவாக்கப்பட்டாலும், அது அந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்டுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாகவும், புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் அமிர்த பாரத் போன்ற ரயில்கள் புதிய தலைமுறை இந்திய ரயில்வேக்கு அடித்தளம் அமைத்து வருகின்றன. வந்தே பாரத் என்பது இந்தியர்களால் இந்தியர்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட இந்தியர்களின் ரயில், இதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறார்கள்.
இன்று, வளர்ந்த இந்தியாவிற்கான அதன் வளங்களை மேம்படுத்துவதற்கான பிரசாரத்தை இந்தியா தொடங்கியுள்ளது, மேலும் இந்த ரயில்கள் அதில் ஒரு மைல்கல்லாக இருக்கும்.
நான்கு புதிய ரயில்கள் சேர்க்கப்பட்டதன் மூலம், நாட்டில் 160க்கும் மேற்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன.
நமது நாட்டில், யாத்திரை பல நூற்றாண்டுகளாகத் தேசிய உணர்வின் ஊடகமாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணங்கள் வெறும் தெய்வங்களைத் தரிசனம் செய்வதற்கான பாதைகள் மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவை இணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியம் என்று மோடி கூறினார்.
புதிய ரயில் சேவைகள் சுற்றுலாத் துறையில் வளர்ச்சியை உருவாக்கும். உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கும். கடந்த 11 ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் புனித யாத்திரை சுற்றுலாவை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளன. விக்சித் காசியிலிருந்து விக்சித் பாரத் (வளர்ந்த இந்தியா) என்ற கனவை நனவாக்க, ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வாரணாசியில் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் அரசு பாடுபடுகிறது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதோடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சரும், பாஜக எம்பி சுரேஷ் கோபி, வந்தே பாரத் ரயிலில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.