

தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ரேகா குப்தா பதிவிட்டுள்ளதாவது, ''தில்லி செங்கோட்டையில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கடினமான சூழலில் உயிரிழந்தோருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு அரசு உறுதுணையாக இருக்கும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்யும். தில்லியில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நேற்று மாலை 6.50 மணியளவில் கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, இந்த சம்பவம் குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.