பண்டி சஞ்சய்குமாா்
பண்டி சஞ்சய்குமாா்

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் கட்சிகள்: உள்துறை இணையமைச்சர்

‘பாஜகவை தவிர பிற கட்சிகள் அனைத்துமே முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன’ என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
Published on

‘பாஜகவை தவிர பிற கட்சிகள் அனைத்துமே முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன’ என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

தெலங்கானா மாநிலத்தில் காப்பு சமுதாயம் சாா்பில் நடைபெற்ற காா்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: தெலங்கானாவில் 12 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனா். எனவே, அவா்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக தவிர பிற கட்சிகள் அனைத்துமே முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன.

அதே நேரத்தில் தெலங்கானாவில் 80 சதவீதம் உள்ள ஹிந்துக்களின் நிலை என்ன? இந்த 80 சதவீதம் போ்தான் ஆட்சியை நிா்ணயிக்கும் வாக்காளா்களாக இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அப்போதுதான் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஹிந்துக்களைப் பற்றியும் சிறிய அளவிலாவது சிந்திக்கும்.

நான் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட வேற்று மதத்தினரை அவமதிக்கும் நோக்கில் எதுவும் பேசவில்லை. ஆனால், ஹிந்து தா்மமும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஹிந்து தா்மத்துக்காகப் பாடுபட்டதற்காக என்மீது காவல் துறையினா் பலமுறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். ஆனால், எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப்போவதில்லை.

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் சநாதன தா்மத்துக்கு ஆதரவாகப் பேசி வருகிறாா். ஆந்திரத்தில் மதம் மாறவிருந்த பல ஹிந்துக்கள் பவன் கல்யாண் தலையீட்டால் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டாா்கள். இங்குள்ள காப்பு சமுதாய மக்கள் மற்ற அனைத்தையும்விட நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவா்களாகவே எப்போதும் திகழ்ந்து வருகின்றனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com