பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், டாக்ஸி ஓட்டுநர்களைக் கத்தியால் குத்த முயன்றவரை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, முதலாவது நுழைவு முனையப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சிஐஎஸ்எஃப் தெரிவித்திருப்பதாவது:
”நவம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவில், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது நுழைவு முனையத்தில், இரண்டு டாக்ஸி ஓட்டுநர்கள் மீது பெரிய கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்தார்.
அங்கு பணியில் இருந்த ஏஎஸ்ஐ சுனில் குமார் தலைமையிலான பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்த முயற்சித்தவரைத் தடுத்து, அவரிடம் இருந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்தனர். இதனால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது.
தாக்குதல் நடத்த முயற்சித்தவரும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கெனவே நடைபெற்ற சம்பவத்துக்கு பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல் முயற்சி நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் சிஐஎஸ்எஃப் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.