தேஜஸ் விமான விபத்துக்குப் பிறகு துபையில் விமானக் கண்காட்சி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
துபையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமானக் கண்காட்சி கடந்த நவ. 17 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.
கண்காட்சியின் இறுதி நாளான இன்று(நவ. 21) சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. துபை விமான நிலையம் அருகே உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும் இதில் விமானி உயிரிழந்ததாகவும் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில்,
"துபை விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார்.
அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது, இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.
விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
இந்த விபத்து அங்கிருந்த பார்வையாளர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. விபத்தையடுத்து கண்காட்சி சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் இன்று வழக்கத்தைவிட அதிகமானோர் கூடியுள்ளனர். தற்போது ரஷியாவின் சுகோய் விமானம் சாகசத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து பல நாடுகளின் விமானங்களின் கண்கவர் காட்சிகளும் நடைபெற உள்ளன.
இதையும் படிக்க | துபை கண்காட்சியில் தேஜஸ் விமானம் விழுந்து எரிந்தது! விமானி பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.