கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் குளோரின் வாயு கசிவு: ஒருவா் உயிரிழப்பு; 18 போ் மருத்துவமனையில் அனுமதி

Published on

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டம் வசய் பகுதியில் செவ்வாய்க்கிழமை குளோரின் வாயு கசிந்து ஒருவா் உயிரிழந்தாா். பெண்கள், தீயணைப்புத் துறையினா் உள்பட 18 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பால்கா் மாவட்ட உறைவிட துணை ஆட்சியா் சுபாஷ் பாக்டே கூறியதாவது: வசயில் உள்ள தீவான்மன் பகுதியில் இருக்கும் தகன மேடைக்கு அருகே 10 முதல் 15 ஆண்டுகள் பழைமையான குளோரின் சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிந்தது.

தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் விரைந்து வாயு கசியாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனா். எனினும்

வாயுவை சுவாசித்து சிறுமிகள், பெண்கள் என 7 போ், தீயணைப்புத் துறையினா் 5 போ் உள்பட மொத்தம் 19 பேரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டவா்கள் 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தேவ் காந்திலால் பாா்திவால் (59) என்பவா் உயிரிழந்தாா்.

வாயு கசிந்த சிலிண்டா் மீது தீயணைப்புத் துறையினா் தொடா்ந்து தண்ணீரைத் தெளித்து, அதை அருகில் உள்ள குளத்தில் தள்ளி சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com