தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.
தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதிகரித்து வரும் தேவையின் விளைவாக தங்கத்தின் விலை அதிகரிக்கவில்லை; மாறாக தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ``ஏழை மனிதன் ஒருவர், தனது குடும்பத்தினரின் திருமணத்தில் ஒரு கிராம் தங்கம்கூட கொடுக்க முடிவதில்லை. தங்கம் ஒருபுறம் இருக்கட்டும்; தற்போது பாஜக பதுக்கி வைப்பதால் வெள்ளியும் ஏழை மக்களுக்கு எட்டுவதில்லை.
பாஜகவினர், தங்கள் கறுப்புப் பணத்தை திடமான சொத்துகளாக மாற்றும் தங்கமயமாக்கல் செயல்முறையே இதற்குக் காரணம். சர்வதேச சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், ஆடம்பர உலோகங்களின் விலை ஏன் தொடர்ந்து உயர்கிறது? என்பதை அரசு விளக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ``ட்ரோன்கள், தொலைநோக்கிகள், புல்டோசர்கள் ஆகியவை அரசியல் எதிரிகளுக்கு மட்டும்தான் பொருந்துமா? தங்கத்தைப் பதுக்குபவர்களைக் கண்காணிக்க வேண்டாமா?’’ என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க: ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.